சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல திரைப்படத்தை காண வந்த நரிக்குறவ இன ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு : பெற்றோருடன் சேர்ந்து பார்க்க வேண்டிய யு/ஏ சான்று படம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக திரையரங்க நிர்வாகம் விளக்கம்
Mar 30 2023 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில், சிம்புவின் பத்து தல படம் பார்க்கச் சென்ற நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இயக்குநர் ஜிவி.பிரகாஷ் கண்டனம் தெரிவித்த நிலையில், யுஏ சான்றிதழ் குறித்து திரையரங்கு நிர்வாகிகள் தவறாக புரிந்து கொண்டதாக படத்தின் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசனின் பத்து தல திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்க, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்ப்பதற்காக சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்கள் டிக்கெட் பெற்று உள்ளே சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த தீண்டாமை செயல் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அதன்பிறகு அவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷ், ரசிகர்கள் தாமதமாக திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது, இருப்பினும் முதலில் அனுமதி மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், அதுதொடர்பாக விளக்கம் அளித்த ரோகிணி திரையரங்கு நிர்வாகம், படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் சிறுவர்களுடன் வந்த அவர்களுக்கு அனுமதி மறுத்ததாக கூறியது. ரோகிணி திரையரங்கு சர்ச்சை குறித்து 'பத்து தல' திரைப்பட இயக்குநர் கிருஷ்ணாவிடம், செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, யுஏ சான்றிதழ் குறித்து அவர் விளக்கமளித்தார்.
ரசிகர்கள் அனுமதிக்கப்படாதது வருத்தமளிப்பதாக கூறிய இயக்குநர் கிருஷ்ணா, அவர்களுக்காக சிறப்புக் காட்சியே போட்டு விடலாம் என பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.