5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்குப்பதிவு கூடுதலாக ஒரு மணிநேரம் நீட்டிப்பு - 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குகளை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Feb 26 2021 7:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் நீட்டிக்கப்படும், வாக்கு சேகரிக்க 5 பேர் மட்டுமே செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
டெல்லியில் இன்று 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை அறிவித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, 5 மாநிலங்களையும் சேர்த்து 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்றும், 18 கோடியே 68 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
5 மாநிலங்களிலும் 2 லட்சத்து 70 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் மட்டும் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்குமுறையை பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு, வீடு வீடாகச் சென்று 5 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் திரு. சுனில் அரோரா குறிப்பிட்டார்.
ஆன்லைன் மூலமாகவும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் - வாக்குப்பதிவு, வீடியோ பதிவு செய்யப்படும் - பதற்றமான வாக்குச்சாவடிகளில் இணையம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் திரு. சுனில் அரோரா வெளியிட்டார்.