விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு
Feb 28 2021 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்கள் உள்பட 19 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதில் எடுத்துச் செல்லப்பட்ட செயற்கைகோள்கள் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில் முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் உள்ளிட்ட 5 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. அதேபோல், அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்களில் அமெரிக்காவின் செயற்கைகோள்கள் மற்றும் இந்தியாவின் சிந்துநேத்ரா உட்பட 14 செயற்கைகோள்கள் புவியின் சுட்டவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேபப விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.