நோயாளிகளுக்கு டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி செலவிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனம் : வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி
Aug 19 2022 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நோயாளிகளுக்கு டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களது நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிகளவில் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில் பரிசுப்பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பொறுப்பாக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் வாதிடுகையில், காய்ச்சலுக்கு அளிக்கப்படும், டோலோ 650 மாத்திரைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக, அந்நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகைக்காக செலவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி சந்திரசூட், 'கொரோனா தொற்றால் தாம் பாதிக்கப்பட்ட போது கூட தமக்கு அந்த மாத்திரைதான் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவித்தார். மிக தீவிரமான இந்த பிரச்னை குறித்து உடனே கவனிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக, 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.