துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 700ஆக உயர்வு- இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்
Feb 8 2023 6:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொடர் நிலநடுக்கங்களால் உருக்குலைந்த துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 700ஐ தாண்டியுள்ளது.
மேற்காசிய நாடான துருக்கியின் தென்மேற்கே உள்ள காசியன்டெப்பை மையமாக வைத்து, கடந்த திங்களன்று அதிகாலையில்
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த தொடர் நிலநடுக்கம் காரணமாக
துருக்கி மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 500 பேரும், சிரியாவில் 2 ஆயிரத்து 200 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, 6 டன் எடைகொண்ட உணவு மற்றும் உயிர் காக்கும் மருந்துகள், மீட்பு மற்றும் மருத்துவக்குழுவுடன் சிரியாவுக்கு இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு சென்றது. இதேபோல் துருக்கி நாட்டுக்கு மீட்பு மற்றும் மருத்துவக்குழுக்கள், மருந்துகளுடன் 4வது விமானப்படை விமானம் சென்றுள்ளது.