மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் புதிய வரலாறு எழுத்தப்பட்டுள்ளது : பெண்களுக்கான அமிர்த காலம் துவங்கி உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு
Sep 22 2023 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொண்டாட்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக பெண்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க பேசினார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை, பெண்கள் மாலை அணிவித்து வாழ்த்தினர். அப்போது அங்கிருந்த பெண்களில் சிலர், பிரதமரின் கால்களில் விழவே, பதிலுக்கு அவரும் தலை வணங்கினார்.
இதை அடுத்து பேசிய பிரதமர் மோடி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், புதிய சரித்திரம் படைத்திருப்பதாகக் கூறினார். இந்த வரலாற்றைப் படைக்கும் வாய்ப்பை கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு வழங்கியது தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு பல தடைகளை சந்தித்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நோக்கங்கள் தூய்மையாகவும், முயற்சிகளில் வெளிப்படைத்தன்மை இருந்ததாலும், எல்லா தடைகளையும் தாண்டி வெற்றி பெற்றதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். நாட்டில் அறுதிப்பெரும்பான்மை அரசு ஆட்சிக்கு வந்தால், எவ்வளவு பெரிய பணிகளையும் முடிக்க முடியும் எனக் கூறிய மோடி, இதற்கு முன்பு, இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது, அதை நிறைவேற்றுவதற்கு திடமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் மோடி சாடினார். நிலையான அரசு அமைந்த பின், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மோடி சுட்டிக் காட்டினார்.