திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இலவச அன்னதான திட்டம் : உணவருந்த வந்தவர்களிடம் கட்டாயப்படுத்தி ரூ. 50 நன்கொடை வசூல் - அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
May 3 2022 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டத்தில் உணவருந்த வந்தவர்களிடம் கோவில் நிர்வாகம் கட்டாயப்படுத்தி 50 ரூபாய் நன்கொடையாக வசூல் செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்கள் வசதிக்காக இந்தக் கோவிலில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் மனமுவந்து நன்கொடை அளித்து வருகின்றனர். அதற்கான ரசீது கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. ஆனால் அன்னதான திட்டத்திற்கு பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என்ற உத்தரவும் உள்ளது. இதனை மீறி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சில நாட்களாக, இலவச அன்னதானத்தில் உணவு அருந்த வரும் பக்தர்களிடம் கோவில் நிர்வாகம் சார்பில் கட்டாயப்படுத்தி நன்கொடை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இலவச முழு நேர அன்னதான திட்டம் என்று கூறி விட்டு உணவருந்த வரும் பக்தர்களிடம் 50 ரூபாய் கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.