தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் - வரும் 26-ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்
Jan 15 2014 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப்பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்களின் பெயரால் வழங்கப்படும் விருதுகள் பெறுபவர்களின் விருப்பத்திற்கிணங்க, திருவள்ளுவர் விருது நீங்கலாக மற்ற விருதுகளான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்தென்றல் திரு.வி.க. மற்றும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் பெயர்களிலான விருதுகளை, குடியரசு தினமான வரும் 26-ம் தேதி தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசிக்கு திருவள்ளுவர் விருதினை, ஏற்கனவே திட்டமிட்டபடி, திருவள்ளுவர் தினமான இன்று நடைபெறும் விழாவில், நிதியமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் - அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது - கவிஞர் யூசி, தந்தை பெரியார் விருது - திருமதி சுலோச்சனா சம்பத், அண்ணல் அம்பேத்கர் விருது - பேராயர் முனைவர் எம். பிரகாஷ், பேரறிஞர் அண்ணா விருது - திரு. பண்ருட்டி ச. ராமச்சந்திரன், பெருந்தலைவர் காமராசர் விருது - திரு. கி.அய்யாறு வாண்டையார், மகாகவி பாரதியார் விருது - முனைவர் கு. ஞானசம்பந்தன், பாவேந்தர் பாரதிதாசன் விருது - முனைவர் திருமதி ராதா செல்லப்பன், தமிழ்த்தென்றல் திரு. வி.க. விருது - திரு. ஜெ.அசோகமித்திரன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - பேராசிரியர் முனைவர் வ.ஜெயதேவன் ஆகியோருக்கு, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில், இன்று நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்தார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவிப்பிற்கு பின்னர், விருதுகள் பெறுபவர்கள், முதலமைச்சரின் திருக்கரங்களால் விருதுகளைப் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
விருது பெறுபவர்களின் விருப்பத்திற்கிணங்க, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவற்றை, வரும் 26-ம் தேதி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் தம்முடைய திருக்கரங்களால் வழங்குவார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுகளை பெறுவோர் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவற்றை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருக்கரங்களால் பெற்றுக் கொள்வார்கள்.
திருவள்ளுவர் விருதைப் பொறுத்தவரையில், திருவள்ளுவர் விருதை பெறும் கவிஞர் யூசி, தைவான் நாட்டிலிருந்து விருதைப் பெறுவதற்காக வருகிறார் என்பதாலும், திருவள்ளுவர் விருதினை திருவள்ளுவர் தினத்தன்று வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதாலும், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் இன்று நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்படும் - இவ்விருதினை பெறுபவருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவற்றை, நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் வழங்குவார் - மேலும், இதே விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவிக்கான அரசாணைகளை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வழங்குவார் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.