வணிகர்கள், பொதுமக்கள், கலைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை தந்த கட்சி திமுக- தீய சக்தி கூட்டத்திடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டிய கடமை அ.ம.மு.க.வுக்கு உண்டு என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
Feb 25 2021 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில், தியாகத்தலைவி சின்னம்மாவின் நல்லாசியுடன், திரு.டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமர்த்த அயராது பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயற்குழு - பொதுக்குழு கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சின்னம்மா நல்லாசியுடன் திரு.டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமர்த்திட அனைவரும் அயராது பாடுபடுவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரு.டிடிவி தினகரன் தலைமையில் அம்மாவின் உண்மைத் தொண்டனாக பயணிப்பது - எல்லா சவால்களையும் எதிர்கொண்டு கழகத்தை சிறப்பாக நடத்தி வரும் திரு.டிடிவி தினகரனுக்கு பாராட்டு தெரிவித்தல் -
துணிச்சலோடு களங்களை சந்தித்து அத்தனை சவால்களுக்கும் கழகத்தை ஆயத்தமாக்கிய பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவித்தல் - கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவிட மிகச்சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர் திரு.டிடிவி தினகரன் என பாராட்டு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
93 கழக மாவட்டங்களில் நடைபெற்ற கழக அமைப்பு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொதுக்குழு சார்பில் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழகப் பொதுச் செயலாளரால் கழகப் பொருளாளராக ஆர். மனோகரன் நியமிக்கப்பட்டதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு, வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - விழிப்புணர்வு பிரிவு உருவாக்கத்திற்கு பொதுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது - சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட அனைத்து முடிவுகளை எடுப்பதற்கும் பொதுச் செயலாளருக்கு பொதுக்குழு முழு அதிகாரம் வழங்கியுள்ளது.
மேலும், நேற்று வரை திரு.டிடிவி தினகரன் கழக நிர்வாகிகளை நியமித்ததற்கும், மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. தியாகத்தலைவி சின்னம்மாவுக்கு 23 மணி நேரம் வரவேற்பு அளித்து சரித்திர சாதனை நிகழ்த்திய கழகத்தினருக்கு பொதுக்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை தந்த கட்சி தி.மு.க. - தீயசக்தி கூட்டத்திடமிருந்து தமிழகத்தை காக்கும் கடமை அ.ம.மு.க-வுக்கு உண்டு என இதில் வலியுறுத்தப்பட்டது.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய நீராதாரப் பிரச்னைகளில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்க மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. வேளாண் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள விவசாயிகள் விரும்பாத பிரிவுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாணவும் பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.
30 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் மத்திய - மாநில அரசுகள் குடியரசுத் தலைவரை அணுகி விடுதலையை அறிவிக்க இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் சுமையை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டுவர மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. மாநில அரசு அமைத்துள்ள சுங்கச் சாவடிகளை முழுமையாக ரத்து செய்ய பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், சுங்கச்சாவடிகளை குறைக்கவும், வாகன பெருக்கத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை குறைக்கவும் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
அ.ம.மு.க எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு தவறான நபர்களின் சுயநலத்தால் சிக்குண்டு இருக்கும் அ.தி.மு.க-வை மீட்டெடுக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்மாவின் மக்கள்நலக் கொள்கைகளை வாழவைத்திட, தமிழர் வாழ்வு மலர்ந்திட சின்னம்மா வாழ்த்துகளோடு செயல்படும் திரு.டிடிவி தினகரனை முதலமைச்சராக்குவது என்றும் பொதுக்குழு சூளுரைத்துள்ளது.