வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு - சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி சட்டம் இயற்றப்பட்டது? என மனுவில் கேள்வி
Mar 2 2021 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரித்து வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடும், எஞ்சியவர்களுக்கு 2 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா, சட்டப்பேரவையில் கடந்த 26ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்டத்தை எதிர்த்து, தென்னாடு மக்கள் கட்சி சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்காலிக சட்டத்தின் அடிப்படையில், அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது? என்றும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. எம்.பி.சி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும், தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.