தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்காக திருத்திய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு - நீதிமன்ற உத்தரவையடுத்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
Jul 2 2022 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் 13 ஆயிரத்து 331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி நிர்வாக குழு மூலம் நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஒரே இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வகுப்பறையில் பாடம் நடத்த அறிவுறுத்தி, அதன் அடிப்படையில் அவர்களின் திறனை அறிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல், வரும் 6 ஆம் நாள் மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.