புரட்சித்தலைவர் தோற்றுவித்து மாண்புமிகு அம்மா கட்டிக்காத்த அ.இ.அ.தி.மு.க.வை அழிக்கும் செயலில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதாக, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அ.ம.மு.க. செயல்வீரர்கள் - வீராங்கனைகள் கூட்டத்தில் உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மாவின், மக்கள் நலக்கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாவட்ட வாரியான செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயல்வீரர்கள் - வீராங்கனைகள் கூட்டம், சேலம் நெய்காரப்பட்டியில் இன்று நடைபெற்றது.
இதற்காக வருகை தந்த பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு, செண்டை மேளம் முழங்க, பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் பூரணகும்பம் ஏந்தி வரவேற்பு அளித்தனர்.
இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் பேரணியாக திரு.டிடிவி தினகரனை அழைத்து வந்தனர். தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஆலோசனைக்கூட்ட மேடைக்கு வந்த திரு.டிடிவி தினகரன், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - புரட்சித்தலைவி அம்மா திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய திரு.டிடிவி தினகரன், பண மூட்டைகளோடு அலைந்து நிர்வாகிகளை விலைக்கு வாங்கி, எப்படியாவது அம்மாவின் பதவியைப் பிடித்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அலைந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பதற்காகவும், தி.மு.க.வில் தமக்கு ஏற்பட்ட அநீதி வேறு யாருக்கும் இழைக்கப்படக்கூடாது என்பதற்காகவும், பொதுச்செயலாளர் என்பவர், கட்சியின் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டுமென புரட்சித்தலைவர் எழுதி வைத்திருப்பதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மண்டலப் பொறுப்பாளரும், சேலம் மத்திய மாவட்டக்கழகச் செயலாளருமான திரு.எஸ்.கே.செல்வம், சேலம் கிழக்கு மாவட்டச்செயலாளர் திரு.கே. சண்முகம், சேலம் மேற்கு மாவட்டச்செயலாளர் திரு.எஸ்.வி. சங்கர், சேலம் வடக்கு மாவட்டச்செயலாளர் திரு.கே.கே. மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.