கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் இடையே கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பையும் அழைத்து சமாதானப்படுத்த வந்த எம்.பி. கனிமொழி, இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், தற்போதைய அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் நீண்ட காலமாகவே பனிப்போர் இருந்துவந்தது. சுரேஷ்ராஜன் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த உள்ளாட்சி தேர்தல் சமயத்தில், சுரேஷ்ராஜனின் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி பறிக்கப்பட, தனது விசுவாசியான மகேஷை அந்த இடத்தில் உட்கார வைத்த மனோ தங்கராஜ், அவரையே நாகர்கோவில் மேயராக்கி அழகு பார்த்தார்.
இருவரும் நகமும் சதையும் போல இணைபிரியாமல் உலா வந்த நிலையில், அண்மை காலமாக இவர்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதற்கட்டமாக, கடந்த மாதம் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக வந்த அமைச்சர் துரைமுருகன், இருவரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கன்னியாகுமரிக்கு வருகை தந்த அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், அதில் மேயர் படம் சின்னதாகவும், அமைச்சர் மற்றும் அமைச்சரின் மகன் படம் பெரியதாகவும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மேயரின் ஆதரவாளர்கள் போஸ்டரை கிழித்தெறிந்தனர். இதனால் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மேயர் மகேஷ் இடையேயான மோதல் வெட்ட வெளிச்சமானது.
இதனால் ஆத்திரமடைந்த துணை மேயர், அமைச்சர் படம் போஸ்டரில் இருந்தது மேயருக்கு பிடிக்காததால் போஸ்டரை ஆள் வைத்து கிழித்ததாக குற்றம்சாட்ட, பதிலுக்கு மேயரோ, தனக்கு எதிராக குழி தோண்டுபவர்கள் அவர்களே அந்த குழியில் விழுவார்கள் என ஆவேசம் காட்டினார்.
கன்னியாகுமரி திமுகவில், அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் உச்ச கட்டத்தை அடைந்த நிலையில், இருவரையும் அழைத்து சமாதானப்படுத்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி நாகர்கோவிலுக்கு வருகை தந்தார். இரு தரப்பையும் தனித்தனியே அழைத்து சமாதானப்படுத்த முயன்ற போதும், இருவரும் அவரவர் நிலைபாட்டில் உறுதியாக இருந்ததால், கனிமொழி, இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.