வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச ஜோதி தரிசனம் கோலாகலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூசத் திருவிழாவை ஒட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்து வருகின்றனர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம், வடலூரில் சத்திய ஞான சபையை 1872 ஆம் ஆண்டு தைப்பூச நாளில் நிறுவினார். அன்றைய தினம், முதல் ஜோதி தரிசனத்தையும் தானே முன்னின்று நடத்தினார். அப்போது முதல் வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச நாளன்று ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, 154-வது தைப்பூச பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா தைப்பூச தினமான இன்று காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. அப்போது கருப்பு திரை, நீல திரை, பச்சை திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மை திரை, கலப்புத் திரை ஆகிய 7 திரைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அங்கு குவிந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் திரளானோர், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை என்ற மகா மந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனத்தை கண்டு களித்தனர்.

தொடர்ந்து காலை 10 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. பின்னர், பிற்பகல் 1 மணிக்கும், இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதே போல நாளை அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. ஜோதி தரிசன விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி ஆந்திரா தெலுங்கானா கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்தனர். இதை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Night
Day