எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது, ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் பதிவு நடைமுறை இல்லாத காலத்திலிருந்தே வக்பு சொத்துக்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வக்பு சொத்துக்கள் எவை என மாவட்ட ஆட்சியர்கள் தீர்மானிப்பது நியாயமானதா? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இந்து அறக்கட்டளை வாரியங்களில் இனிமேல் உறுப்பினர்களாக இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? - இந்து சமய அறநிலையத்துறை, திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஆகியவற்றில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? - இப்படியிருக்க, வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக மனுதாரர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், வக்பு வாரியத்தில் பிற மதத்தினரை உறுப்பினராக சேர்ப்பது நேரடி விதிமீறல் என வாதிட்டார். மேலும் இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் இஸ்லாம் வாரிசு உரிமை என்பது மரணத்திற்கு பிறகுதான்- அதற்கு முன்பாக யாரும் தலையிட முடியாது என வாதிட்டார். இதனையடுத்து வக்பு திருத்த சட்ட வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.