உத்தரகாண்ட் : ஹல்த்வானி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு - ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி மதரசா இடிக்கப்பட்டதால் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு என நகரமே கலவரக் காடானது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். 

நாட்டிலேயே முதல் முறையாக பொதுசிவில் சட்ட மசோதா உத்தரகண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் இம்மாநிலம்தான் பேசுபொருளாக இருந்தது. இந்தநிலையில் ஹல்த்வானியில் பன்புல்புரா காவல் நிலையம் அருகே இருந்த மதரசா மற்றும் நமாஸ் தளம் ஆகியவை ஆக்கிரமிப்பு கட்டங்கள் எனக் கூறிய நகராட்சி நிர்வாகம், அந்த இடத்திற்கு சீல் வைத்தது. இது அந்த பகுதி இஸ்லாமியர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று அந்த கட்டிடங்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்த நிலையில், பதிலுக்கு காவல்துறையினரும் தடியடி நடத்தி மக்களை கலைத்தனர். 

நகரம் முழுவதும் வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு கலவரமாக மாறியது. இந்த கவலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட நைனிடால் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கலவரம் நடந்த பகுதியில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. 

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ஹல்த்வானி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே மதரஸாவை அதிகாரிகள் இடித்ததாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். தற்போது கலவரப் பகுதிக்கு கூடுதல் போலீஸ் மற்றும் மத்திய படைகள் அனுப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.  மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் அதே நேரத்தில் கலவரக்காரர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Night
Day