குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியது மத்திய உள்துறை அமைச்சகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் அகதிகளாக வரும் இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு, குடியுரிமை வழங்கும் வகையில், 2019-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பல சர்ச்கைளுக்கு வித்திட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகளை, மத்திய அரசு நேற்று வெளியிட்டு, அது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவித்தது. 

அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் ஆகியோர், சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவுக்குள் வந்த முஸ்லிம் அல்லாத மக்கள், சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்கள் www.indiancitizenshiponline.nic.in. என்ற இணையதள பக்கத்துக்கு சென்று புதிய பயனர் என்ற விவரங்களை பூர்த்தி செய்து, மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை உள்ளிட்டு பதிவை நிறைவு செய்யலாம். 

இந்திய குடியுரிமை கோருவோர், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 1 ஆண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும்.  அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில், குறைந்தது 6 ஆண்டுகளாவது விண்ணப்பதாரர் இந்தியாவில் தங்கியிருந்தால், அவர் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவர். விண்ணப்பதாரர்கள் தங்களது சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவதாகவும் மற்றும் இந்தியாவை நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இந்தியாவை பூர்விகமாக கொண்டவர், இந்திய குடியுரிமை பெற்றவரைத் திருமணம் செய்தவர், இந்திய குடியுரிமை பெற்றவரின் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவர் ஆகியோர் தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

சட்டபூர்வமாக இந்திய குடியுரிமை கோருவோர், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால்,  'இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டிருப்போம்', 'இந்திய சட்டங்களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்', 'இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூர்த்தி செய்வோம்' என்று விண்ணப்பதாரர் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு, இந்தியாவில் தங்குவதற்காக வழங்கப்பட்ட தற்காலிக அனுமதி சீட்டு, வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரது இந்திய கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி குடியுரிமை கோரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதையடுத்து, இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் விண்ணப்பதாரருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Night
Day