சபாநாயகர் தேர்தல் - பாஜக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான எம்.பி.க்கள் ஆதரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வரலாற்றில் இத்தனை ஆண்டுகள் இல்லாத வகையில் தற்போது சபாநாயகர்  தேர்தலுக்கான காரணங்கள் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..

இந்தியா சுதந்திர அடைந்தது முதல் தற்போது வரை மக்களவை சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் 18வது மக்களவைக்கான சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றுள்ள நிலையில், மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். ஆனால் காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 8 முறை எம்பியாக இருந்த அக்கட்சியின் கொடிக்குன்னிலை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியது .

இந்நிலையில், மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் மரபை பின்தொடர வேண்டும் என கருதிய பாஜக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார். மரபுப்படி மக்களவைத் துணைத்தலைவர் பதவியை எதிர்கட்சிக்கு அளித்தால் ஆதரவு அளிப்பதாக மல்லிகார்ஜூனே கார்கே நிபந்தனை விதித்தார். ஆனால் பாஜக தரப்பில் இது குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் பாஜக கூட்டணி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி. ஓம்பிர்லா சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓம்பிர்லா மனுத்தாக்கலும் செய்தார். துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதன் காரணமாக சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

சபாநாயகர் தேர்வு வாக்கெடுப்பு முறையில் நடத்தப்பட உள்ள நிலையில், பெரும்பாண்மைக்கு 272 எம்.பிக்களின் ஆதரவு தேவை. மொத்தம் உள்ள 543 எம்பிக்கள் உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு 293 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் 236 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம்பிர்லாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. அதே வேளையில், கூட்டணி கட்சி எம்பிக்கள் சபைக்கு வராமல் இருப்பது அல்லது ஓம்பிர்லாவுக்கு பதில் ‛இந்தியா' கூட்ணியின் கொடிக்குன்னில் சுரேசுக்கு வாக்களிப்பது போன்ற நிலை ஏற்பட்டால் சூழல் மாறிவிடும்.

மேலும், பாஜக கூட்டணியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், முந்தைய ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்தவர்கள்.  அப்படி இருக்க, சபாநாயகர் பதவி தங்களிடம் இருந்தால்தான் ஆட்சிக்கு வரும் நெருக்கடிகளை தவிர்க்க முடியும் என்பதால் சபாநாயகர் பதவியை தக்க வைக்க பாஜக முயல்கிறது. அதே சமயம் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்கவிடாமல் தடுக்க ‛இந்தியா' கூட்டணியும் களமிறங்கி உள்ளது. இதனிடையே துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு ஒதுக்குமாறு பாஜக கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை கேட்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மக்களவை சபாநாயகர் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Night
Day