நாளை டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டு மக்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. 

டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்தாலும், 60 புள்ளி 42 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்தநிலையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. காலை 8 மணிக்குத்  வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அடுத்த சில மணி நேரங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வந்து விடும். ஆட்சி அமைக்க ஒரு கட்சி 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.   

இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை களம் கண்டன. மும்முனைப் போட்டி என்று கூறப்பட்டாலும், ஆம் ஆத்மி-பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவியது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், 27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி அரியணையை கைப்பற்ற பாஜகவும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தன. யமுனை நதி மாசு தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய கருவாக இருந்தது.

இந்தநிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகதான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியுள்ளன. அவர்களின் கணிப்புகள் உண்மையாகுமா? அல்லது ஆம் ஆத்மியே 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. 

Night
Day