பீகார் : மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து பீகார் மாநில முதலமைச்சராக 9வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். 

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மஹாகத்பந்தன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

இந்தியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தி வந்ததால் பீகாரில் கடந்த சில நாள்களாகவே அரசியல் குழப்பம் நீடித்து வந்தது.

இதனிடையே, ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முழு அதிகாரம் அளித்து முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து காலை 11.00 மணிக்‍கு  ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த நிதிஷ்குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். அத்துடன் மீண்டும் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி இருந்தார். 

இதையடுத்து மாலை 5 மணிக்கு முதலமைச்சராக நிதிஷ்குமார் 9வது முறையாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2 ஆண்டுகளில் 2 முறை முதல்வராக அவர் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாஜகவைச் சேர்ந்த சாம்ராஜ் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகவும், மேலும், 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். 

Night
Day