புதுச்சேரி : சிறுமியின் உடலை ஜிப்மரில் உடற்கூராய்வு செய்ய உறவினர்கள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் கடந்த 4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி சோலைநகரை சேர்ந்த நாராயணன் - மைதிலி தம்பதியின் 9 வயது மகள் ஆர்த்தி, 4 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில், நேற்று மாலை அம்பேத்கர் நகரில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த முதியவர் விவேகானந்தன், கருணாஸ் உட்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றதும், சிறுமியை முதியவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றபோது சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி தகவல் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து செய்வதரியாது சிறுமியின் கை, கால்களை கட்டி, விவேகானந்தனின் வீட்டிற்கு பின்புறம் உள்ள கால்வாயில் சடலத்தை வீசியதும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து சிறுமி மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்ய உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சிறுமியின் பிரேத பரிசோதனை ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற உள்ளது.


Night
Day