மேற்குவங்கம் : திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கைகலப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து பாஜக சார்பில் 12 மணி நேர பந்த் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுப் பேருந்துகளை ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இயக்கி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தலைமைச் செயலகத்தை பல்வேறு மாணவர்கள் அமைப்பினர் நேற்று முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். 

மாணவர்களின் பேரணியில் காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து பாஜக சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, கடைகள் அடைக்கப்பட்டு பலர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். 

மேற்கு வங்கத்தில் முழு கடையடைப்பு போராட்டத்தால் பதற்றம் நீடித்த நிலையில், ஹவுராவில் அரசுப் பேருந்து ஒட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். பேருந்துக்கள் அடித்து நொறுக்கப்படும் என்ற அச்சத்தில் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து இருப்பதாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முழு கடையடைப்பு போராட்டதுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உத்தர தினாஜ்பூர் பகுதிகள் கடைகள் அனைத்து மூடப்பட்டன. மேலும், அப்பகுதியில் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முழுகடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

முழு கடையடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு பர்கானாஸ் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாங்கான் - சீல்டா இடையே ரயில் சேவை தடைப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.

அலிபுர்துவாரில் முழு கடையடைப்பு போராட்டத்தின் போது இயக்கப்பட்ட அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகி ஒருவரின் வாகனத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 6 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Night
Day