எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தில் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் தன்னை உயிரோடு எரிக்க சதி நடந்தது என கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. குளிர் சாதன பெட்டியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அப்போதைய காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு புகார் மனுவை கல்பனா நாயக் அனுப்பியிருந்தார்.
6 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், கல்பனா நாயக் அளித்த புகார் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜுவாலுக்கு கல்பனா நாயக் அனுப்பிய அந்த புகாரில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி சென்னையில் உள்ள தனது அலுவலக அறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளை வெளிப்படுத்திய சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் கல்பனா நாயக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பிற பதவிகளுக்கான நியமனத்திற்கான தேர்வில் இடஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகவும், தேர்வாணையத்தின் அப்போதைய டி.ஜி.பி முரண்பாடுகளைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் இறுதிப் பட்டியலைத் திருத்த துணைக் குழுவை அமைத்ததாகவும் அந்த புகாரில் கல்பனா நாயக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தனது அறையில் தீ விபத்து ஏற்பட்டதால், அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று மூத்த காவல்துறை அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், ஆனால், அதற்கு முன்னதாகவே தாம் அலுவலகத்திற்கு வந்து விட்டதாகவும் கல்பனா நாயக் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அறையை சென்று பார்த்த போது மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், சற்று விரைவாக அறைக்கு சென்றிருந்தால் உயிரிழந்திருப்பேன் என்றும், தான் முறைகேடுகளை வெளிப்படுத்திய சில நாட்களில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது என்றும் புகாரில் கல்பனா நாயக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.