காட்டுக்குள் காதலனுடன் சிக்கிய மருமகள்... மாமியார் கரிக்கட்டையான பின்னணி...!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு தீ வைத்து எரித்த மருமகள் மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரை இரவோடு இரவாக காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்காதல் முளைத்தது எப்படி?, மாமியாரை கொலை செய்ய என்ன காரணம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த கரிய பெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு ஏழுமலை, சேட்டு என்று இரு மகன்கள் உள்ளனர்.  
 
அலமேலுவின் கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து நிலையில், அலமேலு மூத்த மகன் ஏழுமலை கோவையில் கூலி வேலை செய்து வருகிறார். அலமேலுவின் அண்ணன் நடசேன் என்பவரின் மகள் பவித்ராவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எழுமலை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. 
 
இந்தநிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்பவரது மகன் மணிகண்டன், ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் இதனை அறிந்த அலமேலு இருவரையும் கண்டித்துள்ளார். 

இந்நிலையில் ஆடுமேய்க்க சென்ற பவித்ரா மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி ஆடு மேய்க்கும் இடத்திற்கு மாமியார் அலமேலு சென்றுள்ளார். அப்போது பவித்ரா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகியோர் தனிமையில் இருந்துள்ளனர். 

இதனை கண்ட அலமேலு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா இருவரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

 கொத்தனார் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவரது 2வது மகன் சேட்டு நீண்ட நேரம் ஆகியும் தாய் வீடு திரும்பாததால்  அக்கம்-பக்கம், உறவினர்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் தேடியுள்ளார். எங்கும் கிடைக்காததால் விரக்தி அடைந்தவர் மீண்டும் தனது நன்பன் ராஜேந்திரன் என்பவருடன் ஆடு மேய்க்கும் இடத்திற்கு சென்று, தேடிய நிலையில் ஆங்காங்கே தீ எரிவதைக் கண்டு டார்ச் வெளிசத்தில் தேடி உள்ளார். அப்போது காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் இருந்த அலமேலுவின் உடலைக் கண்டு மிரண்டு போன இருவரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் அலமேலுவின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தொடர்ந்து ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் மணிகண்டன் மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக இருவரையும் சிங்காரப்பேட்டை காவல் துறையினர் இரவோடு இரவாக கைது செய்தனர். இது குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  

கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை மருமகள் கள்ளக்காதலுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day