எழுத்தின் அளவு: அ+ அ- அ
தலைநகர் சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் அருண் மற்றும் சுரேஷ் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த அருண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தனது காதலியை படுகொலை செய்த ரவுடி சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருண் திட்டமிட்டு இருந்ததும், இதில் சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு கொலை செய்ததும் தெரியவந்தது. அருணையும் அவரது அண்ணன் அர்ஜூனனையும் கொலை செய்ய வந்த கும்பல் அர்ஜூனனுக்குப் பதிலாக அருணுடன் படுத்திருந்த படப்பை சுரேஷை கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த இரட்டைக் கொலையை நிகழ்த்திய சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட எட்டு பேரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.