கோவை : குழந்தை விற்பனை - 5 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் ஆயிரத்து 500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி கோவையில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்ற வடமாநில கும்பல் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இரு பச்சிளம் குழந்தைகளையும் மீட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பு...

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த திம்ம நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி விஜயன். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் இதுதொடர்பாக பலரிடம் கூறி புலம்பியுள்ளார். 
 
இந்த நிலையில் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உணவகம் நடத்தி வந்த அஞ்சலி - மகேஷ் குமார் தம்பஃயுடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவரும் தங்களிடம் பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் அந்த குழந்தை பீகாரில் இருப்பதாகவும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், விஜயனுக்கு அவரது பெயரில் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் உடன் குழந்தையை பெற்று தருவதாக கூறியுள்ளனர். 

இதனை தொடர்ந்து விஜயன், பணம் தருவதற்கு ஒத்துக் கொள்ளவே அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். பீகாரில் இருந்த அஞ்சலியின் தாய் பூனம் தேவி மற்றும் அஞ்சலியின் சகோதரி மேகாகுமாரி ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் பீகாரில் இருந்து பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை சூலூருக்கு கொண்டு வந்து அஞ்சலியிடம் கொடுத்தார். 

குழந்தையை பெற்றுக் கொண்ட அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் விவசாயி விஜயனுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளனர்.  முன்னதாக ஒரு லட்சத்து 80 ரூபாய் பணம் கொடுத்த நிலையில் மீதம் 70 ஆயிரம் தர வேண்டி இருந்தது.

இந்த சூழ்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் சைல்ட் லைன் அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குழந்தை விற்பனையை உறுதி செய்தனர். மேலும் இது தொடர்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இது தொடர்பாக காவல்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தை விற்பனை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் உணவகம் நடத்தி வந்த பீகார் தம்பதியினர் அஞ்சலி மற்றும் மகேஷ் குமாரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் தம்பதியினர் கோவையில் ஒரு பெண் குழந்தை மட்டுமின்றி மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுநருக்கு 5 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி இருந்தது தெரியவந்தது. மேலும் மற்றொரு குழந்தை வேண்டும் என அஞ்சலி மகேஷ் குமார் மூலம் நாடகம் ஆடிய காவல்துறையினர், அஞ்சலியின் தாய் மற்றும் அவரது சகோதரியை கோவை வரவழைத்தனர். கோவை வந்த பூனம் தேவி மற்றும் மேகாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டதாகவும், 1,500 ரூபாய் கொடுத்து குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி கோவை கொண்டு வந்து விற்பனை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இதனையடுத்து சூலூரில் விற்கப்பட்ட பெண் குழந்தை மற்றும் பூனம் தேவி மேகா ஆகியோர் கொண்டு வந்த ஆண் குழந்தை ஆகிய இரண்டு குழந்தையையும் மீட்டனர். 

இந்த வழக்கில் குழந்தையை வாங்கிய விவசாயி விஜயன் மற்றும் குழந்தையை விற்ற அஞ்சலி, மகேஷ் குமார், பூனம் தேவி, மேகா ஆகிய ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை விரிவு படுத்தியுள்ள காவல்துறையினர், வேறு ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

Night
Day