ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை.யில் இரு ஆந்திர மாணவர்கள் தற்கொலை - பெற்றோர், சக மாணவர்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த மாணவ, மாணவி ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரப்பா என்பவரது மகன் மஞ்சுநாத் என்பவர் கலசலிங்கம் பல்கலையில் உள்ள விடுதியில் தங்கி பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மஞ்சுநாத் நேற்று காலை கல்லூரிக்கு வந்துள்ளார். தனது விடுதி அறையில் மஞ்சுநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதேபோன்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வடிகபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் கௌகிவாலி பள்ளி அகிலா. இவர் விடுதியில் தங்கி இருந்து பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணன்கோயில் போலீஸார் தற்கொலை செய்து கொண்ட இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் இருவர் தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day