தமிழ் திரையுலகில் பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்ற தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் திரையுலகில் பாலியல் புகாரில் சிக்கும் நபர் மீது குற்றம் உறுதியானால் நடிகர்கள், டெக்னீசியன்கள் உட்பட யாராக இருந்தாலும் 5 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்ற தடை விதிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கேரளாவில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள திரை உலகை புரட்டிப்போட்டுள்ளது. பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், சித்திக், பாபுராஜ் உள்ளிட்ட பலர் மீதும் மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் மற்றும் நடிகர்கள் உட்பட 17 பேர் ராஜினாமா செய்த நிலையில், தொடர் புகார்களால் மலையாள திரை உலகமே நிலைகுலைந்துள்ளது. திரைத்துறையில் இந்த சம்பவம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து நடிகைகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, மலையாள திரையுலகை போன்று தமிழ்திரை உலகிலும் கமிட்டி அமைத்து, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். 

இந்நிலையில், தமிழ் திரையுலகில் விசாகா கமிட்டியின் பரிந்துரையில் பெண் கலைஞர்களின் பாதுகாப்புக்காக 2019ல் உருவாக்கப்பட்ட SIAA - GSICC என்ற கமிட்டி சார்பில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி, கமிட்டி தலைவர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமிக்கவும் கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களின்படி, பாலியல் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், அவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும் என்றும், புகாரில் சிக்கும் நபர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடப்படும், பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதாகவும், தற்போது இ-மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும், அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கமே நேரடியாக கண்காணிக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Night
Day