பாலியல் புகார் எதிரொலி - மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து சமீபத்தில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவில் பல நடிகைகள் தற்போது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகைகள் ரேவதி சம்பத், ஸ்ரீலேகா, மினு முனீர் உள்ளிட்டோர் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேலா பாபு மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்க பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், இயக்குநர் ரஞ்சித்தும் கலாச்சித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இந்நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லாலுக்கு சித்திக்கின் பாலியல் தொல்லைகள் குறித்து தெரியாமல் இருக்குமா? இது தெரிந்தும் மோகன்லால் ஏன் இவ்வளவு  நாட்களாக சித்திக் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என அடுத்தடுத்து சர்ச்சை கிளம்பிய நிலையில், தற்போது மலையாள நடிகர் சங்கத்தலைவர் பதவியிலிருந்து மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவருடன், மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day