"அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" - புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் நெல்லை மாவட்ட பயணத்திட்ட விபரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில், அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொள்கிறார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா. நாளை தொடங்கி 18ஆம் தேதி வரை, புரட்சித்தாய் சின்னம்மா மேற்கொள்ளும் பயணத்திற்கான திட்ட அட்டவணையை, அஇஅதிமுக முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் “அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை” தொடர்ந்து மேற்கொள்கிறார். 

செவ்வாய் கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் புரட்சித்தாய் சின்னம்மாவின் பயணம் தொடங்குகிறது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொள்ளும் அவர், கொக்கிரக்குளத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். திருநெல்வேலி ஜங்ஷனில் தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் சின்னம்மா, திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார். பெரியார் பேருந்து நிலையத்தில் மக்களை சந்திக்கும் புரட்சித்தாய் சின்னம்மா, பின்னர் திருநெல்வேலி ஜங்ஷனில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். வ.உ.சி மணிமண்டபத்தில் கப்பலோட்டிய தமிழன்  வ.உ சிதம்பரம்பிள்ளை அவர்களின் திருவுருவச்சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து, காட்சி மண்டபம், சுத்தமல்லி விலக்கு, கல்லூர், ராமையன்பட்டி, மானூர், வெங்கடாசலபுரம், கங்கைகொண்டான் பஜார், தாழையூத்து, கரையிருப்பு ஆகிய பகுதிகளில் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மக்களை சந்திக்கிறார். 

இரண்டாம் நாளான புதன் கிழமை அன்று பிற்பகல் 3.30 மணிக்கு பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடர்கிறார். வண்ணார் பேட்டை, முருகன்குறிச்சி, மாவட்ட நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில் மக்களை சந்திக்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா. பின்னர் மாவீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் செல்லும் அவர், மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். பாளையங்கோட்டையில் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் சிலைக்கும் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து குல வணிகர்புரம், மேலப்பாளையம் சந்தை முக்கு, கருங்குளம், குறிச்சி ஆகிய பகுதிகளில் மக்களை சந்திக்கிறார். 

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் “அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில்” கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அஇஅதிமுகவின் முகாம் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Night
Day