எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில், ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டள்ளார்.
ரமலான் மாதம், அருள் நிறைந்த ஒரு புனித மாதம் என தெரிவித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, ரமலான் மாதம் என்றதும் அனைவரது நினைவுக்கும் வருவது, இறைநெறி கொண்ட இஸ்லாமியர்களுக்கு இறைவனால் கட்டளை ஆக்கப்பட்ட "நோன்பு" என குறிப்பிட்டுள்ளார். இந்த புனித நோன்பை மேற்கொண்டு உடலையும், உள்ளத்தையும் தூய்மை செய்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையைச் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய நம் அம்மா, இஸ்லாமியப் பெருமக்கள் பயனுறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளார் - அதிலும் குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் அரிசி வழங்கினார் - உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 750 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதோடு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தினார் - வக்ஃப் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகளை வழங்கிட சிறப்பு ஒரு முறை மானியமாக 3 கோடி ரூபாய் வழங்கினார் - பள்ளி வாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் தொடர்ந்து பழுது நீக்குதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 3 கோடி ரூபாயில் வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதியை உருவாக்கினார் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிர்வாக மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தினார் என்றும், ஆதரவற்ற விதவை, ஏழை மற்றும் வயதான இஸ்லாமியப் பெண்களுக்கு உதவிடும் பொருட்டு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இஸ்லாமியப் பெண்கள் உதவிச் சங்கங்களை அமைத்து, ஒவ்வொரு சங்கத்திற்கும் 20 லட்சம் ரூபாய் வரை இணை மானியம் வழங்கினார் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். உருது மொழியை ஒரு மொழிப் பாடமாகப் பயின்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தியதுடன், நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டு தோறும் இலவசமாக வழங்க ஆணையிட்டது போன்ற உன்னத திட்டங்களால் இஸ்லாமியப் பெருமக்கள் பெரிதும் பயனடைந்தனர் என்பதை இந்நன்னாளில் பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்கிறேன் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
"இறைவன் மிகப் பெரியவன்.
சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள்.
மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்.
பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள்.
இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்த சக்தியும் உங்களை வென்றிட முடியாது" என மனிதகுலத்திற்கு வழி காட்டியாக விளங்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை தவறாமல் கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.