அஇஅதிமுக 53-வது ஆண்டு விழா கொண்டாட்டம் - புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53-வது ஆண்டு விழாவை கொண்டாட, கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் சென்னைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துவிட்டு, அவரவர் இருக்கும் இடங்களிலேயே கழக ஆண்டு விழாவினை சிறப்புடன் கொண்டாடுமாறு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தியுள்ளார்.

கழக முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ​அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இன்று 53-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தநாளில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, ஏழை, எளிய, நலிவுற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து, சிறப்புடன் கொண்டாடுவதை நமது வழக்கமாக கடைபிடித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும், சென்னைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துவிட்டு, அவரவர் இருக்கும் இடங்களிலேயே கழக ஆண்டு விழாவினை சிறப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த இயக்கம் புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டதே, ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகத்தான் என்பதை எந்நாளும் மனதில் வைத்து செயல்படும் நமது கழகத்தொண்டர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுமாறு இந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day