ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு 4 முன்விரோதங்களே காரணம் - போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 முக்கிய முன்விரோதமே காரணங்கள் என போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சியை தடுக்க, ஸ்கெட்ச் போட்டு, கொலை செயலை அரங்கேற்றியது விசாரணையில் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


சென்னை பெரம்பூரில் வசித்து வந்த, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முக்கிய அரசியல் கட்சித் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக தீவிர விசரணை நடத்தி வந்த காவல்துறையினர் 4 ஆயிரத்து 982 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

கொலை வழக்கு தொடர்பாக முக்கிய ரவுடிகளான நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 28 நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சென்னையில் ஆட்கள் பலத்தோடு அசுர வளர்ச்சியை அடைந்ததால், அதனை தடுக்கப்பதற்காக கொலை செய்யப்பட்டதாக போலீசார் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுடன் ஏற்பட்ட நில விவகாரம், ரவுடி சம்போ செந்திலை வீட்டு விவகாரத்தில் மிரட்டி 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கியது, ஆற்காடு சுரேஷ் மற்றும் தென்னரசு கொலை வழக்குகள் ஆகிய 4 முன்விரோதங்கள் தான், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக குற்றப் பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்..

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரம் தொடர்பாக எந்தவித முன்விரோதமும் இருப்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள போலீசார், ஆற்காடு சுரேஷ் மரணத்தின் போது, அவரது மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலையை அரங்கேற்ற வேண்டும் என வேகப்படுத்தி இருப்பதாகவும் குற்ற பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரவுடி நாகேந்திரன், அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த கொலையை அரங்கேற்ற நினைத்ததோடு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும்போதெல்லாம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திட்டம் தீட்டியதும், அவரது மகன் அஸ்வத்தாமன் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தியதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

6 மாதமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரெக்கி ஆபரேஷன் நடத்தி கொலையை அரங்கேற்றியதும், இதற்காக மொத்தம் 10 லட்ச ரூபாய் செலவிடப்பட்டதும் தெரியவந்தது. கொலை சம்பவத்தின் போது உடனடியாக கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம், தொழில்நுட்ப ரீதியான விசாரணையை நடத்தியதாலே, பின்புலத்தில் செயல்பட்ட நாகேந்திரன், சம்போ செந்தில், அஸ்வத்தாமன் ஆகியோர் சிக்கியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்களின் 63 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களது வங்கி கணக்கில் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் ரொக்கமாக 80 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்ற பத்திரிக்கையில் 300-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மற்றும் 750 வகையான ஆவணங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை பிடிக்க விரைவில் வெளிநாட்டிற்கு சென்னை போலீசார் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்பதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது.

Night
Day