ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங், ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே இந்தக்‍ கொலை நடந்திருப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பதை காட்டுவதாக தெரிவித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, இந்தப் படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனே கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்‍ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங், ஆறு நபர்கள் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது ஒரு திட்டமிட்ட கொலையாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன - இதன்மூலம் தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதைத்தான் காட்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையென்றால், சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கப்போகிறது? - புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை, இன்றைக்கு கொலைக்‍ களமாக மாற்றியதுதான் திமுக தலைமையிலான அரசின் சாதனையா? என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வரின் சட்டமன்ற தொகுதியாக விளங்கும் கொளத்தூரில், செம்பியம் காவல் நிலையம் அருகிலேயே இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பதன் மூலம் இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது - இந்த படுகொலை நடந்த இடத்தில் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன - தமிழகம் முழுவதும் நடைபெறும் சட்ட விரோத செயல்களை, போதைப் பொருள் கலாச்சாரத்தை, கள்ளச்சாராய விற்பனைகளை கண்டும் காணாமல் அலட்சியப்போக்குடன் இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்த படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனே கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். திரு.ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day