இலங்கை எம்பி இரா.சம்பந்தன் மறைவு - சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திரிகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார். 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திரிகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில், இலங்கை அரசின் அரசியல் சாசனத்தில் மேற்கொண்ட 13வது சட்டதிருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் இரா.சம்பந்தன் என்று புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதம் தெரிவித்துள்ளார். அன்னாரது எண்ணத்தை ஈடேற்றிட இத்தருணத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்காக இலங்கை தீவில் ஓங்கி ஒலித்த தமிழ் குரலுக்கு சொந்தக்காரரான பெரியவர் இரா.சம்பந்தனின் மறைவு இலங்கை தமிழர்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கும் ஒரு பெரும் இழப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்றும், இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இறுதிவரை ஒரே கொள்கையில் உறுதியாக நின்று போராடியவர் பெரியவர் சம்பந்தன் என்பதை யாராலும் மறுக்கமுடியாது எனவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமைகளுக்காக தனது இறுதி மூச்சு வரை போராடிய தலைவர் இரா.சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலங்கை வாழ் தமிழ் சொந்தங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day