எழுத்தின் அளவு: அ+ அ- அ
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து வியாபாரிகளின் ஆதரவுடன் காரைக்காலில் மீனவர்கள் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி, கடலில் மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். இந்த நிலையில் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை மேல் சிகிச்சை பெற விடுவிக்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 8வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள படகை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால், காரைக்கால் வியாபாரிகள் ஆதரவுடன் மீனவர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நாளை குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் நாகூர் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் துறைமுகப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.