பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.
கரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலின் ஆராதனை விழாவில், பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய 2015 முதல் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி நவீன்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது.
இதே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது மத நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த நடைமுறைக்கு உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், தனி நீதிபதி அந்த தீர்ப்புக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது.