இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், இசைஞானி இளையராஜா  மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். 

இசை உலகில் பவதாரிணியின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தையை போன்று இசைஞானம் கொண்ட பவதாரிணி, தமிழ் திரைப்படங்களில் சிறப்பான பல பாடல்களை பாடியிருப்பதாகவும், அதேபோன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில், திரைப்படங்களுக்கு இசையமைத்தும், தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

'பாரதி' படத்தில் அவர் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்கு, தேசிய விருது பெற்று, அவரது தந்தைக்கும் பெருமை சேர்த்தவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

பவதாரிணியை இழந்து வாடும் அவரது தந்தை இசைஞானி இளையராஜாவுக்கும், அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும்  இசையுலக ரசிகர்கள் அனைவருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day