எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் இறந்ததையடுத்து, கடந்த 5-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர், நாதக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 46 பேர் போட்டியிட்டனர்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67 புள்ளி 97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகின. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டன.
தொடர்ந்து அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன. இப்பணியில் மொத்தம் 51 பேர் ஈடுபட உள்ள நிலையில், நாளை பிற்பகலுக்குள் இடைத்தேர்தல் முடிவு முழுமையாகத் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.