கோவையில் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்த காவல்துறையினர் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலரது நடவடிக்கைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசிதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து போலீசார், சோதனையிட்டபோது லேப்டாப் மற்றும் செல்போன்கள் இருந்தது கண்டுபிக்கப்பட்டது. மேலும் ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜேஷ், சௌந்தர், அருண்குமார், நந்தகுமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த காவல்துறையினர், கோடிக்கணக்கிலான பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.