ஒருதலை காதலால் விபரீதம்.. எஸ்.எஸ்.ஐ. மீது பெட்ரோல் குண்டு வீச்சு...!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வீட்டில் அமர்ந்திருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மீதே மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த எஸ்.எஸ்.ஐ. தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவலர் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன் என்ற இளைஞர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கணேசனின் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கணேசன் மீது வீசியுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய கலைவேந்தனை அப்பகுதி மக்கள் பிடித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இருப்பினும் கணேசனின் மூத்த மகளை கலைவேந்தன் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், எஸ்.எஸ்.ஐ. கணேசன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே முழுவிவரம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

2 தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சூழலில் தான் சீர்காழி அருகே எஸ்.எஸ்.ஐ மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையினர் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் எற்படுத்தியுள்ளது. 

Night
Day