ஓணம் பண்டிகை - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பாரம்பரியமாக ஆண்டுதோறும் திருவோணப் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாபலி மன்னனின் அகந்தையை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களை காண வரம் கொடுத்தார்.

அதன்படி, மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நாளில் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வண்ணப் பூக்களால் அழகுற அத்தப்பூ கோலங்கள் இட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை கொண்ட ஓணம் விருந்துண்டு, புலிக்களி, கைகொட்டுக்களி, மோகினி ஆட்டம், கோலாட்டம், ஓணக்களி போன்ற உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும், கயிறு இழுத்தல், களரி, படகுப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பட்டுள்ளார்.

சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும், உயர்வு, தாழ்வு உணர்வுகளுக்கு இடங்கொடாது ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் கொண்டாடப்படும் இத்திருவோண நன்னாளில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day