எழுத்தின் அளவு: அ+ அ- அ
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களின் சாதிப் பெயர்களை நீக்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், சாதிப் பெயர்களை நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் - சாதி பெயர்களை திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசு பள்ளி என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் பள்ளி பெயர்களில் நன்கொடையாளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அவர்களின் சாதி இருக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.