கழக உடன் பிறப்புக்களே ஒன்றிணைவோம் வாருங்கள் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

  "அன்புத் தொண்டர்களே, யாரும் கலங்கவேண்டாம் - நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை  வீழ்த்திவிட முடியாது - இனிவரும் காலம் நமக்‍கானது - அனைவரும் வாருங்கள், வெற்றி அடைவோம் - புதிய சகாப்தம் படைப்போம்" என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத் தொண்டர்கள் அனைவருக்‍கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்‍கையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை என்று தெரிவித்துள்ளார். தமிழக மக்‍களுக்‍கு எந்தவித நன்மையும் இல்லாமல், ஏற்கெனவே ஐந்து வருடங்களை வீணாக்‍கிய திமுக மற்றும் அதன் கூட்டணிக்‍ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் இனிவரும் காலங்களிலும் தமிழக மக்‍களுக்‍கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது - திமுகவினர் பொய்யான வாக்‍குறுதிகளை அளித்து தமிழக மக்‍களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதனைக்‍ கருத முடிகிறது - மேலும், 'ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்‍கு கொண்டாட்டம்' என்ற கதையாக தங்கள் இயக்‍கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக்‍ கொண்டு, திமுக அதில் குளிர் காய்ந்து பெற்ற வெற்றியாகத்தான் இதை பார்க்‍க முடிகிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்‍கம்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‍ கழகம் - அதன் பின்னர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா கஷ்டப்பட்டு வளர்க்‍கப்பட்ட இயக்‍கம் - அதன் வளர்ச்சியில் தனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்‍கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்‍கூடாது என்ற ஒரே எண்ணத்தில்தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன் - கட்சியை ஒருங்கிணைக்‍க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன் - ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்‍காக இயக்‍கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்‍கை பார்க்‍க முடியாது - இந்தியாவின் மூன்றாது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து, இன்றைக்‍கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒருசில இடங்களில் நான்காவது இடத்திற்கும், மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்‍கிறது - மேலும், இதுவரை இயக்‍கம் என்றைக்‍கும் கண்டிராத வகையில், 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை - இதற்காகவா இருபெரும் தலைவர்களும் இந்த இயக்‍கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ளவரை அயராது பாடுபட்டார்கள்? - இது அவர்களுக்‍கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் - இதனை என்னால் சகித்துக்‍ கொள்ளவே முடியவில்லை - இந்த அவலநிலை எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள் - அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்‍கமாக நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்‍கு மாபெரும் வெற்றி பெற்று இருக்‍கும் - திமுக கூட்டணி படுதோல்வி அடைந்து இருக்‍கும் என, புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்‍கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை - தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்‍கும் எந்தப் பலனும் இல்லை - யாராக இருந்தாலும் சுயமாக சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும் - இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்திக்‍ கொள்ள வேண்டும் - அனைத்தையும் இழந்துவிட்டு நீலிக்‍கண்ணீர் வடிப்பதால் யாருக்‍கும் எந்தப் பலனும் இல்லை - இதுபோன்று புரட்சித்தலைவர் ஆரம்பித்து, புரட்சித்தலைவி அம்மா வளர்த்தெடுத்த இயக்‍கம் தொடர்ந்து தோல்வி அடைய வேண்டுமா? அல்லது​வெற்றியை ஈட்ட வேண்டுமா? என்பதை தீர்மானிக்‍க வேண்டிய தருணம் வந்துவிட்டது - இந்த யதார்த்தத்தை உணர்ந்து கட்சியை ஒருங்கிணைக்‍க அனைவரும் வரவேண்டும் - புரட்சித்தலைவி அம்மா "இந்த இயக்‍கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்‍களுக்‍காகவே இயங்கும்" என்று சூளுரைத்ததை அனைவரும் மனதில் வைத்து ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்‍ கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டு மக்‍கள், திமுக தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சியில் கடுமையாக பாதிப்படைந்து இருக்‍கிறார்கள் - திமுகவினர் நாள்தோறும் தமிழக மக்‍களை கசக்‍கிப் பிழிந்து அவர்களுக்‍கு மிகப்பெரிய கொடுமையை அளித்து வருகின்றனர் - எனவே, மக்‍களிடம் நன்மதிப்பை பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்‍காத ஒன்று என்பதை நன்றாக அறிந்த திமுகவினர், எதிர்க்‍கட்சியினரை பிளவுப்படுத்தி அதன்மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு இந்த இயக்‍கத்தை ஒன்றிணையாமல் பார்த்துக்‍ கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்‍கின்றனர் - இயக்‍கத்தில் இருக்‍கும் ஒரு சில நிர்வாகிகள் கட்சி நலனை புறம்தள்ளிவிட்டு சுயநலப்போக்‍கோடு செயல்பட்டு இயக்‍கத்தை தொடர்ந்து தோல்வி அடைய வைப்பதால், கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலமே கேள்விக்‍குறியாகிறது - மேலும், இதன் காரணமாக தமிழக மக்‍களும் திமுகவினரிடம் சிக்‍கி சின்னாபின்னம் ஆகிறார்கள் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். எனவே, திமுகவினரின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்‍களை காத்திடவேண்டும் என்ற ஒரே நோக்‍கத்தில்தான் புரட்சித்தலைவர் இந்த இயக்‍கத்தை தொடங்கினார் - இதனை மனதில் வைத்துதான் இந்த இயக்‍கத்தில் பிரிந்து கிடக்‍கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன் - தமிழ்நாட்டு மக்‍களும் இந்த இயக்‍கம் ஒன்றுபட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள் - புரட்சித்தலைவி அம்மா ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் ஏழை, எளிய சாமானிய மக்‍கள் நிம்மதியாக வாழ முடியும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது நம் புரட்சித் தலைவருக்‍கும், புரட்சித் தலைவிக்‍கும் இந்த இயக்‍கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்‍கும் கோடான கோடி தொண்டர்களுக்‍கும், தமிழ்நாட்டு மக்‍களுக்‍கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகிவிடும் - எனவே, இந்த இயக்‍கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் - கழக நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து, தமிழக மக்‍களையும் இந்த இயக்‍கத்தின் உன்னத தொண்டர்களின் உணர்வையும் உயர்வையும் எண்ணி அனைவரும் வாருங்கள் - உங்கள் அனைவரையும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் அரவணைத்து, அம்மா கட்டிக்‍காத்த அதே கொள்கைகளை நிலைநிறுத்தி, ஜாதி மதங்களுக்‍கு அப்பாற்பட்டு புரட்சித்தலைவரின் பொன்மொழிக்‍கேற்ப, புரட்சித்தலைவியின் வழி வந்த ஓர்தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, ஓர் அணியில் நின்று, ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம், என்னுடைய குறிக்‍கோள் - கழகத்தினரும் தமிழக மக்‍களும்தான் எனது குடும்பம் - புரட்சித்தலைவி அம்மா போலவே எனக்‍கென்று தனிப்பட்ட குடும்பம் கிடையாது - எனக்‍கென்று தனியாக எந்தவித சுய விருப்பு, வெறுப்புகளும் இருந்தது கிடையாது - எனது உடன்பிறவா சகோதரியாக, தோழியாக, அரசியலில் ஆசானாக இருந்த புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்‍குப் பிறகு நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் கட்சியின் நலனுக்‍காகவும், தமிழக மக்‍களின் நலனுக்காக மட்டும்தான் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்‍ கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் எதிரிகளின் சூழ்ச்சியால் எங்கள் மீது பொய்யாக போடப்பட்ட வழக்‍கின் தீர்ப்பால் கடந்த 2017ம் ஆண்டு சிறை செல்ல வேண்டிய நெருக்‍கடியான நேரத்திலும் எனது ஒரே சிந்தனை, எப்படியாவது அம்மாவின் ஆட்சியைக்‍ காப்பாற்றி விடவேண்டும், அதேபோன்று கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் - இதற்காக பல்வேறு நெருக்‍கடிகளுக்‍கு மத்தியிலும் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிவிட்டுதான் சென்றேன் - ஆனால், என்ன நடந்தது? - தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் வரமுடியவில்லை - கட்சியும் காப்பாற்றப்படவில்லை - புரட்சித்தலைவரோடு பயணித்த காலங்களில் அவர் இந்த கட்சி ஏழைகளுக்‍கான கட்சி என்றும், அதனால் கட்சிதான் முக்‍கியம், தொண்டர்கள்தான் முக்‍கியம் என்பதை எப்போதும் என்னிடம் சொல்லியிருக்‍கிறார் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். எனவே, எனக்‍கு இந்த கட்சியை நம்பிக்‍ கொண்டிருக்‍கும் கோடான கோடி தொண்டர்களும் தமிழக மக்‍களும்தான் முக்‍கியம் - இதை நன்றாக உணர்ந்து இந்த கட்சி அழிந்துவிடக்‍கூடாது, தமிழக மக்‍கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள் - ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்‍கொண்டு இருக்‍கிறது - மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்‍கு - வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்‍க முடியாது - அதற்கான பணிகளை உடனே ஆரம்பிக்‍க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்‍கிறோம் - கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்‍களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வரவேண்டும் - உங்கள் அனைவரையும் "ஜெயலலிதா இல்லம்" அன்புடன் வரவேற்கிறது என்பதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்‍ கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

கழக உடன் பிறப்புக்‍களே ஒன்றிணைவோம் வாருங்கள் - நம் இயக்‍கத்தின் வளர்ச்சிக்காகவும் உயிர் தொண்டர்களின் உயர்வுக்‍காகவும், தமிழக மக்‍களின் வாழ்வுக்காகவும் ஒன்றிணைவோம் வாருங்கள் -

கழகத் தொண்டர்களே யாரும் கலங்கவேண்டாம் - நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்திவிட முடியாது - இனி வரும்காலம் நமக்‍கானது - நம் இருபெரும் தலைவர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் வெற்றியை பெறப்போகிறோம் என்பதை மனதில் வைத்து,

"தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்,
ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால்
நாளை நமதே"

என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

Night
Day