கால்வாய்களை எவ்வாறு பராமரிக்கவேண்டும் என எடுத்துரைத்த புரட்சித்தாய் சின்னம்மா - உரிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

மழைக் காலங்களில் சென்னை பெருநகரில், வீடுகளுக்கு உள்ளேயும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பெருமளவில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால்தான் சென்னை மாநகர் நீரில் தத்தளிப்பதைத் தவிர்க்க முடியும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்ததோடு, இதற்காக 3 கால்வாய்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறிய நிலையில், இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை பெருநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்களையும் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் மழையினால் சேதமடைந்த பல இடங்களுக்கு நடந்தே சென்று, ஏழை, எளிய மக்களிடம் புரட்சித்தாய் சின்னம்மா குறைகளைக் கேட்டறிந்தார். மழைநீர் புகுந்த வீடுகள், தெருக்கள் மற்றும் தண்ணீரில் தத்தளிக்கும் பகுதிகளை சின்னம்மா பார்வையிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புரட்சித்தாய் சின்னம்மா, மழைக்கு முன்பே தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். 

ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை எவ்வாறு தூர் வாரி, முகத்துவாரங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்பது குறித்து புரட்சித்தாய் சின்னம்மா எடுத்துரைத்தார். அரசு இதைச் செய்யாமல் இருந்தால் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதையும், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியாது என்று சின்னம்மா திட்டவட்டமாக தெரிவித்தார். அரசு இதனை உடனடியாகச் செய்யவேண்டும் என்றும் சின்னம்மா வலியுறுத்தினார்.

இந்நிலையில், சென்னையில் அரசு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், வீராங்கல் கால்வாய் ஆகியவற்றின் பராமரிப்பை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய 3 வடிகால்கள், பராமரிப்பு பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்படும் என்று இந்த அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நீர்நிலைகளுக்கான மாற்றங்கள், அதற்கேற்ற திருத்தங்கள், திட்டங்கள் மற்றும் செயலாக்கங்கள், நீர்நிலைப் படுகைகளை மேம்படுத்துதல் போன்ற அனைத்துவகை செயல்பாடுகளையும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் பராமரிப்புக்கு ஒப்படைக்க வேண்டும் என நீர்வளத்துறை அறிவுறுத்தப்படுவதாக இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day