சிறுவனின் வாயை குதறிய நாய்... !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை தெருநாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை காப்பாற்ற சென்ற தந்தையும் நாய் கடிக்கு ஆளானார். தொடரும் நாய் கடி சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ராட்வீலர் நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயமடைந்தார். தொடர்ந்து ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில், காவலர் ஒருவரின் வளர்ப்பு நாய் கடித்ததில் 5 வயது சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவமும் நிகழ்ந்தது. 

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் வசிக்கும் சுரேஷ் - நீலா என்ற தம்பதி, கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது நீலாவை அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் கடித்தன.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் கீழே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்துக் குதறியது.

தொடரும் நாய்கடி சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவங்களால் ஏற்பட்ட பீதி அடங்குவதற்குள், மீண்டும் ஒரு நாய்கடி சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த பல்லூர் அருகே கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது மகனான நிர்மல்ராஜ், வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவ்வழியாக சென்று கொண்டிருந்த தெரு நாய் ஒன்று, சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு துரத்தி துரத்தி கடித்ததில், சிறுவனின் வாய்ப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை பாலாஜி நாயிடம் இருந்து குழந்தையை மீட்க முயன்றுள்ளார். அப்போது பாலாஜியும் நாய்கடிக்கு ஆளானார். 

இதனையடுத்து இருவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபகாலமாகவே தெருநாய்கள் முதல் வளர்ப்பு நாய்கள் வரை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி கடித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் 5 வயது சிறுமி, ஆதம்பாக்கம் பகுதியில் 5 வயது சிறுவன், சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் நடந்து சென்ற சுரேஷ் - நீலா தம்பதியினர், சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் உள்ளிட்ட பலர் நாயிடம் கடிவாங்கி, பாதிப்பு உள்ளாகி உள்ள நிலையில், தற்போது 5 வயது சிறுவனை வாய் முழுவதும் தெரு நாய் கடித்துக் குதறிய சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day