சீமான் விவகாரம் - ஐகோர்ட் உத்தரவுக்கு தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வாரங்களில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு சீமானிடம் 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மாதம் 21-ம் தேதி உத்தரவிட்டனர். 

இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு இன்று நீதிபதி பி.வி நாகரத்தினா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த காலங்களில் காவல்துறையில் கொடுத்த புகார் திரும்பப் பெறப்பட்ட பிறகு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக சீமான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இதற்கு முன்பு மூன்று முறை இவ்வழக்கை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ள நிலையில் 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்ற அமர்வு, இந்த விவகாரத்தில், இரு தரப்பும் அமர்ந்து பேசி சுமூக முடிவு எடுக்க அறிவுறுத்தியது.

Night
Day