சென்னையில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, வரும் 22-ம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 23-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day