மொழி கொள்கை பிரச்சனையை தூக்கி பிடித்துக்கொண்டு தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்ற பார்ப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டியுள்ளார். மத்திய அரசைக் குறை கூறி தப்பித்துக்கொள்வதை விட்டுவிட்டு, தமிழகத்திற்கான நிதியை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது ஆட்சிகாலங்களில் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை என்றும், இதை இன்றைக்கும் அனைவரும் உறுதியுடன் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். திமுக தலைமையிலான அரசு இந்த விஷயத்தில் வீண் அரசியல் செய்துகொண்டு மத்திய அரசைக் குறை கூறி தப்பித்துக்கொள்வதை விட்டுவிட்டு, தமிழகத்திற்கான நிதியை பெற தேவையான வழிமுறைகளை கண்டறிந்து, அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மொழிப் பிரச்னைகளையும், சாதிய பிரச்னைகளையும் தூக்கி பிடித்துக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்ற பார்க்கிறது என்று குற்றம்சாட்டினார். இன்றைக்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது- இதைப்பற்றியெல்லாம் எந்தவித கவலையும் படாமல் திமுக தலைமையிலான அரசு அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி, பத்திரிகை என அனைத்து ஊடகங்களிலும் திமுக ஆட்சியின் அவலங்கள் வெளியில் வராமல் பார்த்துக்கொள்ள வசதியாக தமிழகத்தில் நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்னையை சாதி ரீதியிலோ, மொழி சம்பந்தமாகவோ மையப்படுத்தி அது தொடர்பான செய்திகள் மட்டும் முதன்மையாக இருப்பது போன்று மாயத் தோற்றத்தை உருவாக்குவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். ஆனால் இதன் மூலம் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப்போவது இல்லை - தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தங்கள் வசம் கொண்டுள்ள திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர், அரசியல் செய்வதை விட்டுவிட்டு, பாராளுமன்றத்தில் நமது மாநிலத்தின் தேவைகளை எடுத்து கூறி மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியினை பெற்றுத்தர வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மாணவச்செல்வங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு தேவையான கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.