தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - புதிய பதிவாளராக ராஜசேகர் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பி.எட். படிப்புக்கான தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட புதிய வினாத்தாள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்த்துறை பல்கலைக்கழகத்தின் பி.எட். 2ம் ஆண்டு 4ம் பருவ தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இன்று படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வு நடைபெறவிருந்தது. இந்நிலையில் இத்தேர்வுக்கான வினாத்தாள் நேற்றே கசிந்தது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதுபோன்று முறைகேடாக முன்கூட்டியே தேர்வர்களிடம் வினாத்தாள் கிடைத்து விடுவதாகவும், B.Ed. பயிலும் மாணவர்களுக்கான பருவத்தேர்வு முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், முன்கூட்டியே வெளியான படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் தேர்வுக்கான வினாத்தாளை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் துறை பல்கலைக்கழகம் தெரிவித்தது. 

இதனையடுத்து, தேர்வு தொடங்குவதற்கு முன்பு அனைத்து தேர்வு மையங்களுக்கும் இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டது. இந்த வினாத்தாள் பதவிறக்கம் செய்யப்பட்டு அதன் நகல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

இதனிடையே, பி.எட். தேர்வு வினாத்தாள் மதுரையில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து கசிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் 5 தேர்வு மையங்களில் கடந்த 27ம் தேதி முதல் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், எந்த மையத்தில் வினாத்தாள் கசிந்ததது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக ராஜசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பதிவாளராக இருந்த ராமகிருஷ்ணன், கடந்த 23ம் தேதி பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவி காலியாக இருந்தது. நேற்று பிஎட் பருவத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்து விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரவோடு இரவாக புதிய பதிவாளராக ராஜசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Night
Day